சுரா என்கிற அகழ்வாராய்ச்சியாளர்

க. பஞ்சாங்கம்

சு.ரா.வின் இந்த 634 பக்கம் நாவல் வாழ்க்கைபோல விரிந்து கிடக்கிறது. படித்து முடிக்கும்போது மூளையெல்லாம் தேன் கூடு போலாயிற்று என்று உணர்கிற இந்தக் கணத்தில், நுகர்கிற வாசகன் என்ற அளவில் எனக்குள் நிகழ்ந்த விளைவுகளைப் பதிவு செய்துள்ளேன். ஏதாவதொரு கோணத்தில் இந்த வார்த்தைக் குவியலைக் கிளறிப் பார்க்கும்போது முற்றிலும் வேறான கூறுகள் அப்போது கிடைத்தாலும் கிடைக்கலாம்; கிடைத்தால் அப்போது அதை எழுதிக்கொள்ளலாம்; வாழ்க்கைப்பற்றி எப்படியெல்லாமோ எழுதிப் பார்த்துக்கொள்ளலாம்தானே.

ஆலப்புழையில் 15 பிள்ளைகளோடு பிறந்த எஸ்.ஆர்.எஸ், சந்தை தலைகீழாகக் கவிழ்ந்தபோது சிதறிய நெல்லிக்காய்களில் ஒன்றாய் கோட்டயம் வந்து விழுகிறார். ஒரு கதை மாந்தர்போல நாவலில் வரும் ‘ஸ்ரீநிவாஸ்’ என்ற வீடு, எஸ்.ஆர்.எஸ்,. அவர் மனைவி லட்சுமி, தொடர்பு வைத்துள்ள ஒரே சகோதரி பங்கஜம், அவர் கணவன் அனந்து, பிள்ளைகள் பாலு, ரமணி, கல்விகற்க ஸ்ரீநிவாஸ் வந்துசேர்ந்த லட்சுமியின் தங்கை வள்ளி, அதரவற்ற அனந்தம், வேலைக்காரி கெளரி, கணக்கெழுதும் கரீம் மாப்ளே – இது ஒரு குடும்பம். ஒன்றுவிட்ட சித்தப்பா பையன் சாமு, அவன் மனைவி சீதா, பிள்ளைகள் லச்சம், கோமு இது ஒரு குடும்பம். எஸ்.ஆர்.எஸ்ஸின் மாமா சேது அய்யர், அவரது பிள்ளைகள் லட்சுமி, வள்ளி, கோமதி, கோபு, வாசு, மாது, மருமகள் ருக்கு - இது ஒரு குடும்பம்; டாக்டர் பிஷாரடி, பைத்தியமான அவர் மனைவி சாவித்திரி, பிள்ளைகள் ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் - இது ஒரு குடும்பம்; கைலாசமடம் நாராயண அய்யர் குடும்பத்தின் வாரிசுகளான கைலாசமடம் சுப்ரமணியம், ஐந்தாவது மகன் சம்பத் இப்படி ஒரு குடும்பம். சனிக்கிழமை பிற்பகலில் வேனல் பந்தலில் செங்கல்சூளை கருநாகப் பள்ளி, ஆசிரியர் காந்தியவாதி கோவிந்தன் குட்டி, அவர் சீடர் செல்லப்பா, டாக்டர் பிஷாரடி, தேயிலைக் கம்பனியின் பிரதிநிதி சம்பத், பிடில் ராமய்யர், கைலாசமடம் சுப்ரமணியம், கே.ஆர் நீலகண்டப்பிள்ளை; எஸ்.ஆர்.எஸ்ஸின் பெயரைக் கெடுக்கவென்று அவதாரம் எடுத்துள்ள புதுப்பணக்காரன் -அரசியல்வாதி – அவுரான் மாப்ளே, எலிசபெத் டாச்சர், இவர் கணவர் - கோட்டயம் காந்தி என்று அழைக்கப்படும் ச.எம். தோமஸ், கார்த்தியாயினி, பலருடனான பாலியல் உறவுக்குப் பலியாகி அழியும் நாராயணி, லச்சத்தைத் தவறான உறவுக்குப் பயன்படுத்தும் வைத்தியர், வாழைத்தோட்டம், லட்சுமியின் ஆஸ்த்மா நோய், டாக்டர் மேத்யூ தரகன் என்று வருகின்ற பல்வேறுபட்ட மனித உறவுத் தளத்தில் நிகழ்த்தப்படும் மொழியாடலில் கரைந்து கிடக்கும் சூட்சமங்களையும் இடுக்குகளையும் மெளனங்களையும் வக்கிரங்களையும் தனக்கான மொழியில் பதிவு செய்வதே நாவலின் இயக்கமாக அமைகிறது ‘மனித மனங்கள் எவ்வளவு வக்கிரமாக ஒன்றையொன்று பின்னி முடிச்சுப் போட்டுக்கொண்டு விடுகின்றன’ (ப.591) நாவல் முழுக்க இதை வெளிக்கொணரத்தான் முயற்சி நடப்பதுபோலத் தெரிகிறது.

சுராவின் ஒட்டுமொத்தமான எழுத்து இயக்கத்தைக் கவனித்தால், உடன்பாட்டிற்கு (Thesis) எதிர்ப்பாட்டை (anti-thesis) உருவாக்குவதுதான் கலை இலக்கியத்தின் இயக்கப்போக்காக இருக்கிற சூழலில், இவர் எப்போதுமே ஒத்திசைவை(Synthesis) தேடுவதிலேயே கவனம் கொள்கிறார். இந்தப் புதினத்திலும் இதுதான் வெளிப்படுகிறது. ஒரு பொருள் ‘அது ‘வாக இருக்கும் அதே கணத்தில், அதற்கு எதிரான ஒன்றாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற இயங்கியல் உணர்வை எஸ்.ஆர்.எஸ், லட்சுமி, டாக்டர், ஸ்ரீதரன், வள்ளி, சுகன்யா என்ற தன் கதை மாந்தர் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டு வியக்கும்போது கதைசொல்லி ‘சித்தரிக்கின்றவனாக ‘ மட்டுமே இயங்கிவிடுகிறார். அவருக்குக் கதை சொல்ல-புனைந்து கூற- ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது. எனவேதான் நடப்பியல் நாவல் என்றுகூடச் சொல்ல முடியாதபடி, தனக்கென எந்தத் தேர்வும் இல்லாமல், இயற்கையியல்( Naturalism) பண்பு நாவலாகச் செயல்படுகிறது. ஒரு விவரணப்படம்( Documentary Film) போல நாவல் நகர்கிறது. பெரும்பாலும் பிராமணச் சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தி சார்ந்த மதிப்பீடுகளை விமர்சனம் ஏதும் இன்றி ஒரு பார்வையாளனாகப் பதிவு செய்வதே நோக்கம் என்று கதைசொல்லிக்கு ஒரு திட்டவரையறை இருப்பது புலப்படுகிறது. எனவேதான் தனது மதிப்பீடுகளை எங்கே மனிதர்களுக்கே உரிய அதிகப்பிரசங்கித்தனம் மேலிடப் பதிவு செய்துவிடுவோமோ என்று தன்னிலிருந்து தப்பித்து ஓடுவதிலும் மிகக் கவனமாகச் செயல்படுவது நாவலின் இயக்கப்போக்காகவே அமைந்துள்ளது (சான்று பிச்சைக்காரர்கள் பற்றிய பதிவு; மார்க்ஸ் பற்றி பிஷாரடி கூறுவது (510-511)

ஒரு எழுத்தாளனின் டைரிக் குறிப்பு. எழுத்தாளன் என்றால் அவனுக்கென்று ரகசியப் பக்கங்கள் இல்லையா என்றால், வாழ்க்கையில் பெரும்பான்மை நேரங்களை இலக்கியத்துக்கென்று செலவழித்து வீணாப் போன எழுதாளனுக்கென்று ஏது ரகசியப் பக்கங்கள்? அவனுக்கு காதல் கூட இல்லையா என்றால் அவன் கண்ணுக்கு மிக அழாககத் தெரிந்த ஓமனக் குட்டி உடன் ஏற்பட்ட நட்பைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவு இலக்கியக் காதல் வந்து புகுந்து கொள்ள அவள் ஆசையோடு அவனுக்குக் காட்டும் அவளது கவிதைகளை அவன் நிராகரித்து தன்னை ஒரு கவிதாயினியாக கற்பித்து வைத்திருக்கும் அவளது உணர்வுகளை சீண்டி விட்டு விட அந்த கணத்திலேயே அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுகிறது.

தன்னைப்பற்றிய ‘போதாமை ‘ உணர்வினால் ஒவ்வொரு பாத்திரமும் தன்னைப் பொட்டுப் பூச்சியாய் உணர்ந்து புழுங்கி வெந்து வெம்பும் கொடுமை பக்கம் முழுவதும் பரந்து கிடக்கிறது. கதைசொல்லிக்குள் துடிக்கும் இந்த ‘போதாமை’ பற்றிய உணர்வின் தீவிரம், இப்படி எல்லாப் பாத்திரங்களுக்கும் முகவரி இருந்தும்கூட முகமில்லாமல் ஆக்கியிருக்கிறது. காரணம், நாவல் அடிப்படையில் சுய வரலாற்று நாவலாக இயங்குவதுதான். கதைசொல்லியின் ஆளுமை எஸ்.ஆர்.எஸ்-க்குள் மட்டுமல்ல, எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்து வழிகிறது. மேலும் சு.ரா என்கிற மனிதரும் நாவலின் கதைசொல்லியும் பிரித்துப் பார்க்கமுடியாதபடி கரைந்து கிடக்கின்றனர். கழிந்துபோன தன் இளமைக் கால வாழ்க்கையை, அறுபத்தி ஐந்து வயதுக்கான மன்நிலையோடு வாழ்ந்து பார்க்க அளாவுகிற விசித்திரமான மனத்தின் செயல்பாடுதான் நாவலை இப்படி ஆக்கியிருக்கிறது. ‘இரண்டு வார்த்தைகளால் நான்கு வார்த்தைகளால் கூறமாட்டேன் ‘ என்கும் சுரா, ஏனிந்த நாவலில் இப்படி வார்த்தை மோகம் கொண்டார் என்பதற்கான விடை இதில்தான் அடங்கியிருக்கிறது.; கூடவே நாவல் எழுதுகிறோம் என்ற வடிவம் பற்றிய பிரக்ஞையும் நாவலை இந்த அளவிற்குப் பெரிதாக்கியிருக்கிறது. நாவல் பற்றிய பிரக்ஞை தனக்குள் செயல்பட்டதை முன்னுரையிலேயே குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இந்தப் பிரக்ஞையோடு செயல்பட்டதால்தான் 107 கவிதைகள்போல 108 சிறுகதைகளாகப் (இதையும் 107 அத்தியாயமாகவே வைத்திருந்தால் வேடிக்கையான பல விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்) போய்விடும் விபத்திலிருந்து நாவல் தப்பித்திருக்கிறது. அப்படியும் ‘பல சிறுகதைகள் ‘ தப்புக்கடலையாக முளைப்பதற்குத் தயாராக மறைந்து கிடக்கத்தான் செய்கின்றன(சான்றாக நாராயணி கதை (28) தபால்காரன் கதை (30) முதலியன)

நாவலின் களம் இலக்கியச் சூழல். நாற்பது ஐம்பதுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களை கதாபாதிரங்களாகக் கொண்டு எழுபதுகளில் இருந்த இலக்கிய சூழலை விமர்சிக்கும் முயற்சியாக எழுதப்பட்ட நாவல் என்று சொல்லலாம். நிலைமை இப்படியே நீடிக்காது வெகு குறுகிய காலத்தில் மிகப்பெரிய மாற்றம் இலக்கிய சூழலில் வரும் என்ற மிகப்பெரும் நம்பிக்கையையும் சு.ரா இங்கே முன் வைக்கிறார். அவர் நம்பிக்கை எந்த அளவு நிறைவேறியது என்பதை இலக்கியவாதிகள் தான் சொல்ல வேண்டும்.

அடிப்படையில் நாவல் தந்தை X மகன் என்ற ஆதித் தொன்மத்தின் மேல்தான் எழுப்பப்பட்டிருக்கிறது. ‘தாத்தா இறந்ததும் பாட்டி, இன்னிக்குத்தான் உங்க முன்னால தைரியமா உக்கார்ந்திண்டிருக்கேன் ‘ என்று அழுதாளாம். அந்தத் தாத்தாவின் பேரன் நான் ‘ என்கிறார் எஸ்.ஆர்.எஸ். இத்தகைய மரபில் வந்ததால், ‘உங்களுடன் ஒப்பிடமுடியாத பிள்ளை நான், ஒப்பிடும்படி நான் பாலுவை வளர்க்க வேண்டும். அதுதான் நான் உங்களுக்குச் செய்யும் அஞ்சலி அப்பா’ எனக் கருதுகிறார் எஸ்.ஆர்.எஸ். அதே நேரத்தில் ‘நான் ஒரு பழமைவாதி, என்னை உசுப்பிக்கொள்ள நான் விரும்புகிறேன்’ என உதறிவிட்டு எழுவதற்கும் முயல்கிறார். ஆனால் ‘எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத’ எஸ்.ஆர்.எஸ், நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இந்த இரண்டு தூண்களையும் ஓடி ஓடித் தொடும் குழந்தைபோல’ ஆகிவிடுகிறார். நாவலை இந்த இழுப்பு விசைதான் (tension) நகர்த்துகிறது. ‘எனக்கு வந்துசேர்ந்த வழியில் நம்பிக்கை இல்லை; போய்ச்சேர வழியும் தெரியவில்லை’ எனக்கூறும் எஸ்.ஆர்.எஸ், தனக்கும், தன் மனைவிக்கும், தன் மகனுக்கும் புரியாத புதிராய் மாறி, மகனின் மனவியலையே அச்சம் என்னும் பேய்க்கு ஒப்படைக்கிறவராக மாறிவிடுகிறார்; டாக்டர் மாத்யூ தரகன் மூலம் இதை உணர நேரும்போது குழந்தைபோல அழுகிறார்; இத்தகைய முரணின் விளைவாக, தான் என்னும் ‘முழுமையைப் ‘ பிளந்து, கூர்மையான ஊசிக்கண்களால் ‘பகுதிகளைச் சோதனைச் சாலையில் குத்தி வைத்து முள்கம்பி ஆயுதங்களால், வேதியல் திரவங்களால் ஆய்ந்து கண்டவைகளை முன்வைத்து, இத்தகையப் பகுதிகளா ‘ ஒன்று சேரும்போது இப்படி ‘நானாக’ வெளிப்படுகின்றன’ என்று வியப்பில் விளையாடுகிற விளையாட்டாக இந்த எழுத்துக்கள் பல இடங்களில் இயங்குகின்றன.

பல இடங்களில் பல எழுத்தாளர்களின் கருத்துக்கள் வாயிலாகவும் ஏன் ஜே.ஜே மூலமாகவும் கூட சு.ரா தன் கருத்துக்களை முன் வைக்கிறார் என்று கொள்ளவும் இடமிருக்கிறது. இலக்கிய சூழல் மேலான தமது விமர்சனங்களை நேரடியாகச் சொல்லும் போது ஏற்படக் கூடிய சங்கடங்களை தவிர்க்க ஆனால் சொல்லி விடவும் வேண்டும் என்ற நிலையில் தான் செய்யக் கூடியதாக கருதியதே ஜே.ஜே சில குறிப்புகளாக உருவாகி இருப்பதாக நாவலின் பாலு மூலம் வெளிப்படுத்தி விடுகிறார் சு.ரா.

ஊதாரியான அப்பனுக்குப் பிறந்த பிள்ளை ‘லச்சை ‘ மிகவும் புத்திசாலிப் பையனாக இருந்தும், தான் தோன்றித்தனமாய்ச் சுற்றியதால் யாருக்கும் பயன்படாமல் போய்ப் பிணமாக வந்து வீட்டுக்குள் விழுகிறான். தன் விருப்பம் போல் உருவொக்கச் சிலத் தந்திரமான நடவடிக்கைகளை மகன் மேல் செலுத்தியதன் மூலம், குடும்பத்தையே நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறார் எஸ்.ஆர்.எஸ்.

சரி! பிள்ளையே இல்லாத பங்கஜம்- அனந்து வாழ்வும் அமைதியாக நகரவில்லை.

இப்படி எதற்கும் பிடிபடாத உறவாக இது திமிறிக்கொண்டே ஓடுகின்றது. குடும்ப உறவுதான் இப்படி என்றால் சமூக உறவிலும் பதற்றம் எதிரொலிக்கிறது. புதிதாக முளைத்த புதுப்பணக்காரன் சூழ்ச்சியால் ‘தான் பொல்லாதவன் ‘ எனக் கணிக்கப்படும் கொடுமையை எண்ணிக் கலங்குகிறார் எஸ்.ஆர்.எஸ்.

மேலும் பெருந்தன்மையோடு, ஆதரவின்றி வந்த விதவை ஆனந்தத்திற்கு வாழ்வு கொடுத்தார். தன்னோடு இணைத்து நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் கண்டார். அவளும் இப்பொழுது ஒரிரவில் செல்லப்பாவுடன் ஓடிவிட்டாள். தன் வீட்டில் இருந்து கல்வி கற்க வந்த கொழுந்தியாள் வள்ளியும், வேறு சாதியிலுள்ள ஸ்ரீதரனைக் காதலிக்கிறாள். அவனோடு இணைத்து வைக்க எந்த முயற்சியும் செய்யாமல், அப்பன் வந்து கூப்பிட்டுப் போகும்போதும் ‘சும்மாவே ‘ இருந்து விடுகிறார்.

கடைசியில் எல்லாம் சூனியம்தானா ? வேனிற் சபையில் காரசாரமாக விவாதித்தவை எல்லாம் வீண்தானா ? ‘துல்லியமாய்ச் சிந்திப்பவன் செயலுக்கு ஆகமாட்டான்! என்பதும் உண்மையா ? கதைசொல்லி நம்மைச் சூன்யத்தில் தள்ளவில்லை. புதிய பிறவி எடுக்கச் சொல்கிறார். செத்த பிறகு தான் புதிய பிறவி என்பதில்லை. இந்த இப்பிறவியிலேயே பலப்பல புதிய பிறவிகளை உற்பத்திச் செய்து கொள்ள முடியும். அதற்கு என்ன வழி ? தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கி கொண்டு இடம் பெயர்ந்து விடுவதுதான் அந்த வழி. நாடோடியாகு! எந்த அளவிற்கு உன்னை நாடோடியாக்கிக் கொள்கிறாயோ அந்த அளவிற்கு இங்கே வாழ்க்கை வாழத் தக்கதாக இருக்கும். அறியத் தக்கதாக இருக்கும். நம்முடைய வனங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் காய்ந்த நிலப்பகுதிகளிலும் அலைகிற சிலப்பதிகார, இதிகாசக் கதை மாந்தர்கள் நினைவுக்கு வருகிறார்கள்; அப்படி அலைந்தாலும் இந்த மனித உயிருக்கு விடுதலை சாத்தியம்தானா ? பனி பொழியும் காலையில் நடந்துகொண்டிருக்கிறேன். ஒரு சில்லான் தார்ச்சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மூச்செடுத்து ஓடிப் புல்தரையை அடைந்தவுடன் ‘பார்த்தாயா! உன் காலில் மிதிபடாமல் பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிட்டேன்’ என்று தலையைத் தூக்கிப் பேசுவதுபோல் தோன்றுகிறது.

இப்படி இன்னும் எழுதிக்கொண்டே போவதற்கு வாய்ப்பாக இந்த நாவல் நிறைய வெளிகளோடும் மெளனங்களோடும் படைக்கப்பட்டிருக்கிறது. பிராமணர்களைப் பற்றிய இடங்களில் மட்டும் பிராமணப் பேச்சு நடை; மற்ற இடங்களில் எழுத்து நடை எனப் பின்பற்றப் படுகிறது. மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. சுத்தம் துல்லியம் என்று அடைய முடியாத ஒன்றிற்காக மேன் மேலும் கழுவிக் கொட்டுகிற ‘வாளித்தண்ணியோடு குழந்தையும் போய்விடக் கூடாதே என்ற விழிப்புணர்வோடும்’ இந்தப் பிரதி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதே அளவிற்குக் கவனத்தோடும் நிதானத்தோடும் இப்பிரதி தமிழ்ச் சூழலில் வாசிக்கப்படுமா, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ எழுப்பி இருக்கிற இமேஜ் தடையாக நிற்குமா என்கிற பல சந்தேகங்கள் எழுகின்றன. நாவலில் எஸ்.ஆர்.எஸ் கூறுவதுபோல ‘சந்தேகப் பிராணிகளால் லோகத்திற்குப் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கு; கூட இருக்கிற மனுசங்களுக்கு அவனைப் பிடிக்காது; காலத்திற்கு அவனைப் பிடிக்கும்’ நானும் அப்படித்தான் நம்புகிறேன்.

நன்றி:கதைசொல்லி – மார்ச்- மே-99